Saturday, December 30, 2017

காம - தேனுவின் முத்தம்

Posted by பால கணேஷ் Saturday, December 30, 2017
ரித்திரம், பேன்டஸி, ஆன்மீகம் என்று ஏதாவது ஒரு பின்புலத்தில் மர்மத்தைக் கலந்து காக்டெய்ல் நாவல்களைத் தந்துவரும் இனிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மாவின் 8வது நாவலாக ‘காமதேனுவின் முத்தம்’ இப்போது வெளியாகி உள்ளது. இது காதல் + பேன்டஸி + மெலிதான மர்மம் கலந்த காக்டெய்லாக வந்திருக்கிறது.  நியாயமாகப் பார்த்தால் ‘காமதேனுவுக்கு முத்தம்’ என்றுதான் அவர் டைட்டில் வைத்திருக்க வேண்டும். ஹி... ஹி... காமதேனு முத்ததைப் பெறுகிறாளே அன்றி அவள் தரவில்லை. சரி, அதை விடுங்கள். நாவல் படிக்க சுவாரஸ்யம் தந்ததா? இல்லையா என்பதைப் பார்க்கலாம்.

கதை இரண்டு ட்ராக்குகளாகச் சொல்லப்படுகிறது. கோவூரில் வசிக்கும் பாண்டி சகோதரர்களின் குடும்பம் பற்றிய கதை ஒரு ட்ராக்கிலும் சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் நித்யமூர்த்தி, அவர் மகள் சுபாங்கி, டாக்டர் நரேந்திரநாத், அவரின் அக்கா அம்சா ஆகியோர் அடங்கிய ஒரு ட்ராக்கிலும் சொல்லப்பட்டு, நாவலின் பிற்பகுதியில் அழகாக இரண்டையும் ஒன்றிணைத்திருக்கிறார்.

கோவூரில் பாண்டி என்ற பொதுப்பெயர் கொண்ட சகோதரர்கள் குடும்பத்துப் பெண் கர்ப்பம் தரிப்பாளேயாகில் சுபகாயை தினத்தன்று அவள் கண்களுக்குக் காமதேனு காட்சி தருவாள். அப்படிக் காட்சி தந்தால் பிறக்கும் குழந்தை காமதேனுவின் அம்சமாகப் பிறக்கும். காமதேனு வாழுமிடத்தில் சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதால் அவர்கள் குடும்பம் செழித்து வளரும் என்பது நம்பிக்கை. கடைசிப் பாண்டியின் மனைவி தமயந்தி காமதேனுவைப் பார்த்துவிட, அவளுக்குத் தரப்பட்ட எச்சரிக்கையையும் மீறி தன் குடும்பத்தினரிடம் பார்த்ததைச் சொல்லிவிட, துவங்குகிறது வினை. ‘சின்னத்தம்பி’ பட குஷ்பூ போல சதாசர்வ நேரமும் பாடிகார்டுகள் சூழ, தெய்வக் குழந்தை வளர்க்கப்பட்டு தெய்வக் குமரி ஆகிறாள்.

ஆண் சம்பந்தம் ஏற்பட்டாலே தெய்வத்தன்மை போய்விடும் என்கிற நிலையில் அதை ஏற்படவிட யாருக்குத்தான் மனம் வரும்? பாண்டி சகோதரர்களின் தங்கை காமதேனுவின் அம்சமாகப் பிறந்தவள் என்பதையும், அவள் என்னவானாள் என்பதே தெரியாது என்கிற நிலையும், மாமியார் தற்போது பைத்தியமாக இருப்பதும் தமயந்தியைக் கலங்கடிக்கின்றன. அப்புறம் என்ன ஆனது..? இந்தக் காமதேனுப் பெண்ணின் சக்திகள் என்ன செய்தன? அவள் சாதாரணப் பெண்ணாக வாழ முடிந்ததா?  தேனுவுக்கு முத்தம் தந்த அந்தக் காமன் யார்? சென்னைக் குடும்பம் எந்த வகையில் இவர்களுடன் தொடர்புபடுகிறது? இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எழுப்பிவிட்டு அந்த முடிச்சுகளை சுவாரசியம் குறையாமல் அவிழ்த்திருக்கிறார் நரசிம்மா. (இதற்குமேல் எதைச் சொன்னாலும் அவர் வைத்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்து படிக்கிற சுவாரசியம் போய்விடும் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.)

காதல் இந்தக் கதையில் மூன்று விதங்களில் சொல்லப்பட்டு அலசப்பட்டிருக்கிறது. சந்தீப்பின் மீது சுபாங்கிக்கு வரும் காதல் டிபிகல் தற்கால அவசரயுகக் காதலைக் கண்முன் வைக்கிறது. டாக்டர் நரேந்திரன் ரேணுகா மீது கொண்ட காதல் அன்றும் இன்றும் என்றும் அரிதான வகையில் உள்ள தெய்வீகமான காதலைக் காட்சிப்படுத்துகிறது. தேனுகாவின் மேல் காமேஸ்வரனுக்கு வரும் காதல் உணர்வுகளுடன், அறிவுபூர்வமாகச் சிந்திக்கிற காதலாக ப்ராக்டிகல் காதல் என்ற வகையில் காட்டப்படுகிறது. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி படித்தோமானால் இரண்டு, மூன்று, ஒன்று என்று வகைப்படுத்தத் தோன்றும். மூன்றுமே உணர்வுபூர்வமாக ரசிக்கும்படி எழுதப்பட்டிருப்பது நரசிம்மாவின் திறமைக்குச் சான்று.

காமதேனுவின் சக்திகள் என்னவெல்லாம் செய்யும்? அது போய்விட்டால் என்னவெல்லாம் நிகழும் என்வற்றை நரசிம்மா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பிரமிக்க வைத்தது. அதேபோல்தான் டாக்டர் நரேந்திரன் எந்த வகையில் பாண்டி குடும்பத்தாருடன் சம்பந்தப்படுகிறார் என்பதற்கு அவர் வைத்திருந்த திருப்பமும். ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்குகையில் நரேந்திரனும், அம்சாவும் மருத்துவமனையில் என்ன செய்கிறார்கள் என்பதை யூகித்துவிட முடிந்தது. (டோண்ட் வொர்ரி நரசிம்மா சார். எளிய வாசகனால் அத்தனை சுலபமாக யூகித்துவிட முடியாது.) என்றாலும் அடுத்தடுத்த திருப்பங்கள் அபாரமானவை. 

அழகர் கோடங்கி, காசிலிங்கம் மாமா, செக்யூரிட்டிகளாக வரும் காண்டீபன், தேனப்பன், காமேஷின் அப்பா சிவனேசன் என்று உப பாத்திரங்களும் நேர்த்தியாக, அவரவர் குணாதிசயங்களுடன் வடிக்கப்பட்டிருப்பது பிரமாதமாக இருக்கிறது. அதுபோலத்தான் கதையில் பல வில்லன் கதாபாத்திரங்கள் செயல்பட்டாலும் எவரையும் நாம் வெறுத்துவிடாதபடி கதையைச் சொல்லியிருக்கும் விதமும். பாண்டி சகோதரர்களின் அம்மா பாஞ்சாலி கதாபாத்திரம் படிப்பவர் மனதில் பரிதாபத்தைத் தோற்றுவிக்கத் தவறாத வண்ணம் அழுத்தமாகப் பின்னப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பு. இவை யாவற்றையும் விட மகத்தான ஒன்று, கதைப் பின்னல் உத்தி இங்குமங்குமாக தாவிச் சென்றாலும் சற்றும் குழப்பாமல் கதை சொன்ன அந்த உத்தி சபாஷ் போட வைக்கிற ஒன்று. கதையில் லாஜிக் தவறுகள் எதுவும் இல்லாதிருப்பதும் இதம்.

இத்தனை நல்ல அம்சங்களையும் மீறி ஒருவித எரிச்சலுடனேயேதான் கதையைப் படித்து முடிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நரசிம்மா அல்ல. கதையை வெளியிட்டிருக்கும் ஸ்ரீ பதிப்பகத்தார், சற்றே சிரமம் பாராமல் ஒரு ப்ரூப் ரீடரை வேலைக்கு வைத்துக் கொள்ளுதல் உத்தமம். புத்தகத்தில் ஒற்றுப் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம். எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கலாம். ஆனால் கருத்துப் பிழைகள் ஏராளமாக வருவது தாங்க முடியாத எரிச்சலைத் தருகிறது. உதாரணமாக, மகளின் தலையை ஆதூரத்துடன் வருடினாள் என்று வரவேண்டியது, ஆதாரத்துடன் வருடினாள் என்று வருகிறது. கணக்குப் பிள்ளை முதலாளியை பெரியய்யா என்று கூப்பிட வேண்டியது ‘பெரியப்பா’ என்று கூப்பிடுகிறார். (கொடூரம்). அவன் சுமையை அனாயாசமாகத் தாங்கினான் என்பதற்குப் பதில் ‘அனாவசியமாக’(?) தாங்கினான் என்றுள்ளது. ஸ்டுபிடிட்டி டு த கோர் என்று வரவேண்டியது ‘ஸ்டுப்பிடிட்டி டு த கேர்ள்ஸ்’ என்றிருக்கிறது. பட்டியல் போட்டால் தனிப் பதிவாகத்தான் எழுத வேண்டியிருக்கும். மொத்தத்தில்... சமையல் நன்றாகச் செய்திருந்தும், சமைத்தவரைப் பாராட்டித் தள்ள விருப்பம் இருந்தும் பரிமாறிய பாத்திரம் சரியாக அமையாமல் போய்விட்டது. பாவம் நரசிம்மா. 

Tuesday, September 5, 2017

ன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைவரும் அவரவர் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நிறையப் பதிவுகள் இட்டிருந்ததைக் காண நேர்ந்தது. நான் என் ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர்ந்தால் என்ன என்று மனதில் பின்னோக்கி பள்ளிக் காலத்திலிருந்து எண்ணிப் பார்த்ததில் ஒவ்வொருவராக மனத்தில் ஸ்லைடு ஸ்லைடாக வந்து போனார்கள். யாரைப் பற்றிச் சொல்லலாம்..?

ரிடையர்மெண்டுக்குச் சில ஆண்டுகளே பாக்கி வைத்திருந்த, வழுக்கைத் தலையும் கைத்தடியுமாக யுத்தக் கப்பல் ஒன்று அசைவதைப் போல ஆடிஆடி நடந்து வரும் டிஆர்ஜி (டி.ஆர்.கோவிந்தராஜன்) சார், அகன்ற தன் உடம்பால் கோல்போஸ்ட்டையே மறைத்து எங்களுடன் பந்து விளையாடிய சுந்தரம் வாத்தியார், பத்தாம் வகுப்பை நெருங்கும் நிலையிலும் தமிழ் இலக்கணத்தில் நான் பூஜ்யமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து, ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்தபின் எனக்காகப் பத்து நிமிடங்கள் பிரத்யேக இலக்கண வகுப்பு நடத்திய புதிய வார்ப்புகள் பாக்யராஜ் போன்ற தோற்றத்திலிருந்த காளிதாஸ் ஐயா,

என் தமிழை ரசித்து மேம்படுத்திய தாசரதி ஐயா, வழுக்கைத் தலையுடன், சிறு தோல் பிரச்சனையும் இருந்ததால் வெயிலிலும் மழையிலும் எப்போதும் கையில் விரித்த குடையுடன் இருந்ததால் ‘குடை ஸார்’ என்று பட்டப்பெயர் பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம், உலகின் மிகச்சிறந்த ஜோக்கைச் சொன்னால்கூட இவர் சிரிக்க மாட்டார் என்று எங்களால் கேலி செய்யப்பட்ட, மீசையற்ற தீவிரமான முகத்துடன் எப்போதும காணப்படும் பேராசிரியர் கல்யாணம்.... அனைவரும் வந்து போனார்கள்.

ஆனாலும்... பழம் தின்று கொட்டை போட்ட இந்த ஆசிரியர்கள் அனைவரையும் விட, என்னைப் பழம் தின்ன வைத்துக் காசு போட வைத்த மங்கையர்க்கரசி டீச்சர்தான் மனசில் வந்து போகிறார்.  தட்ஸிட்... அவருடன் சேர்ந்து அந்தச் சம்பவமும் மனதில் நிழலாடுகிறது.

அது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். என் அப்பாவுக்கு என் மீது பாசம் கொஞ்சமில்லை... மிகமிக அதிகம். யாராவது 2ம் கிளாஸ் படிக்கிற பையனுக்குக் கண்ணில் காசைக் காட்டுவார்களா..? என் அப்பா காட்டியவர். இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்துப் பைசா என்று அவ்வப்போது மிட்டாய் வாங்கிச் சாப்பிட பாக்கெட் சில்லறை கிடைக்கும். நம்புங்கள்... அந்த நாணயங்களுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. 30 பைசாவில் ஒருபெரிய மாம்பழமே வாங்கித் தின்னலாம் என்றால் பாருங்கள்.


அப்போது எனக்கொரு வினோத(கெட்ட) பழக்கம் இருந்தது. மங்கை டீச்சர் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கையில் வழக்கம்போல பத்துப் பைசாவை வாயின் ஒரு புறத்தில் வைத்து அதக்கியபடி வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பாடத்தின் இடையில் டீச்சர் ஏதோ சொல்லிச் சிரிக்க வைக்க, மற்ற பையன்களுடன் சேர்ந்து சிரித்ததில் வாயோரமிருந்த பைசாவானது நழுவித் தொண்டையை நோக்கிச் சென்று அங்கே சுங்கச்சாவடி எதுமில்லாததால் நேராக வயிற்றை நோக்கி வழுக்கிக் கொண்டு பயணித்தது.

அப்போதைய பத்துப்  பைசாக்கள் இன்றுள்ளவை போல் வட்டமாக இல்லாமல்  நெளிநெளியான ஓரங்களுடன், மெட்டலில் செய்யப்பட்டிருக்கும். படம் காண்க. அதனால் தொண்டையில் அடைத்துக் கொள்ளவில்லை. இல்லையேல் தொண்டை அடைத்துக் கொண்டு மூச்சுத் திணறி அன்றே பரலோகப் பயணத்தைத் துவக்கியிருப்பேன். ஆனாலும் நாணயத்தை விழுங்கியதில் இயல்புக்கு மாறாக விக்கோ விக்கென்று விக்கி, அட் எ டைம் நாலு ஆடு திருடியவனைப் போல திருதிருவென நான் விழிப்பதைக் கண்டு மங்கை டீச்சர் என்னவென்று கேட்க, உண்மையைத் திக்கி திக்கிச் சொன்னேன்.

அதிர்ந்து போய்விட்டார் மங்கை டீச்சர். ஆனாலும் சமயோசிதமாகச் செயல்பட்டார். ஒரு பயலை அனுப்பி இரண்டு பெரிய வாழைப் பழங்களை வாங்கிவர வைத்து என்னை விழுங்க வைத்தார். நான்கு டம்ளர் நிறையத் தண்ணீரைத் தந்து தலையில் தட்டிக் குடிக்கச் செய்தார். பின் பியூரை (வயசானவரை மருவாதி இல்லாம பியூன்ங்கலாங்களா? ஹி.. ஹி...) அழைத்து நடந்ததை வீட்டில் சொல்லி என்னை ஒப்படைத்து வருமாறு அனுப்பினார். 

அவர் சொன்னதைக் கேட்டு வீட்டில் அதிர்ச்சியுடன் கோபத்தையும் அடைஞ்சாங்க அம்மா.  அந்த பின்மதியத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனக்கு ரெண்டு செல்லச் சாத்து சாத்தி (அம்மா அடிச்சு என்னிக்கு எவனுக்கு வலிச்சிருக்கு?) வயித்தை வலிக்குதாடா? தலை சுத்துதாடா? என்று பலப்பல கேள்விகளைக் கேட்டு பதறிக் கொண்டிருந்தார். எனக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை உண்மையில் அந்தக் காசு வயிற்றில் தொல்லை எதுவுமின்றி செட்டிலாகி விட்டது போல. கேட்டதற்கெல்லாம் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

இதற்குள் ஆபீஸிலிருந்து சித்தப்பா வந்துவிட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு புரியாக்கதிர் எடுக்கச் சொன்னார்கள். எடுத்தோம். மருத்துவர் அதை வெளிச்சத்தில் பார்த்து வயிற்றில் எதுவும் இல்லை, சுத்தமாக இருக்கிறது என்று அறிவித்தார். எதற்கும் இரவு தூங்கட்டும். காலையில் மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்து விடலாம் என்றார். சொந்த பிசினஸ் என்பதால் இரவுதான் அப்பா வருவார். வந்ததும் அவர்மீது குற்றப் பத்திரிகை சாட்டப்பட, விஸ்கி விஸ்கி... ச்சே, விக்கி விக்கி அழுது கொண்டிருந்த என்னை அப்பாதான் சமாதானம் செய்தார். மறுநாள் காலையில் மீண்டும் புரியாக்கதிர் படம். அப்போதும் வயிறு க்ளியர். இறுதியில் மங்கை டீச்சர் தந்த வாழைப்பழமும் தண்ணீரும் காயினுடன் வினைபுரிந்து அதைக் கழிவுடன் வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும், இனி எனக்கு எதுவும் பிரச்சினை வராது என்றும் தன் ஆராய்ச்சி முடிவை அறிவித்தார்.

அப்பாடா... என்று ஆறுதலுடன் மருத்துவமனையிலிருந்து தப்பித்த சந்தோஷத்துடன் விளையாடப் போய்விட்டேன் நான். ஆனால் மருத்துவராலும் என் வீட்டினராலும் சமயோசிதமாகச் செயல்பட்ட மங்கை டீச்சர் வெகுவாகப் பாராட்டப்பட்டார். அப்போது நன்றியெல்லாம் சொல்லி மகிழ்விக்கிற அளவுக்குப் பண்பாடு எனக்கு வளரவில்லை என்றாலும், இப்போது நினைக்கையில் மங்கை டீச்சர் நினைவிற்கு வருகிறார். ஆனால், என்ன ஒரு சோகம்... அதன்பின் சில்லறையைக் கண்ணில் காட்டுகிற வழக்கத்தை அப்பா நிறுத்தி விட்டார் என்பதுதான். அவ்வ்வ்வ்....

Friday, August 11, 2017

என் முதல் நாவல்

Posted by பால கணேஷ் Friday, August 11, 2017
ப்ரல் மாதத்தில் ஓர் நாள்... தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டில் இருந்து என் முகநூல் நண்பராக இருக்கும் உதவி ஆசிரியர் ஒருவர் என்னை வந்து சந்திக்கச் சொன்னார். போய்ப் பார்த்தேன். தாங்கள் மாத நாவல்கள் வெளியிட உள்ளதாகவும், வரும் மாதத்திலேயே நான்கு நாவல்கள் வெளியிடும் உத்தேசம் இருக்கிறது என்றும், நான்கில் ஒரு நாவலை நான் எழுதித் தர இயலுமா என்றும் கேட்டார்.

பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வரவேண்டும், அதற்காக நான் சின்ஸியராக முயல வேண்டும் என்று அதற்கு முந்தைய வாரம்தான் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூலில் பதிவு எழுதி யிருந்தார். நானும் பத்திரிகையில் எழுத முயல்வதற்குத் துவங்கியிருந்தேன் என் முயற்சிகளை. இப்படியான நிலையில் அவர்கள் கேட்டதும் சிறிதும் சிந்திக்காமல் சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். ஒரே வாரத்தில் நாவலைத் தந்தாக வேண்டிய அவசரம் இருந்தது.

நாவலை எழுதத் துவங்கினால்... இடையில் சில காலம் எழுத மறந்ததால் நகைச்சுவை வண்டி ஓடாமல் ஸ்டரக்அப் ஆகி நின்றது. தொடர்ந்து எண்ணெய் போட்டு (ஐ மீன், எழுதி) வைத்திருந்தால்தான் வண்டி ஓடும் என்பதைப் புரிந்து கொண்ட சமயம் அது. ஓடினேன் குருநாதர் சேட்டைக்காரனிடம். அவர் முதல் சில அத்தியாயங்களைத் திருத்தி, அவருடைய ஸ்பெஷல் டச்கள் சிலவற்றை சேர்த்துக் கொடுத்தார். அவ்வளவுதான்... அதையே கெட்டியாகக் பிடித்துக் கொண்டு கடகடவென்று வண்டியை ஓட்ட, அதன்பின் வரும் உவமை, பன்ச் போன்றவை சரளமாக வந்து விழுந்தன. கடகடவென ஒரே வாரத்தில் முடித்து அனுப்பி விட்டேன் நல்ல பிள்ளையாக.

ஆனால் அவர்களின் நிர்வாகப் பிரச்சனைகள் ஏதோ குறுக்கிட, மாதம் ஒன்றாக வெளியிடத் துவங்கினார்கள். அந்த வகையில் நான்காவதாக என் நாவல் இப்போது வெளியாகி இருக்கிறது. (ஹப்பாடா... வந்தாச்சு...)

இது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற ஒரு அரிய வகை நாவலாகும். படிக்கையில் நிச்சயம் சிரிப்பீர்கள். படித்து முடித்தபின் எதற்காகச் சிரித்தோம் என்று சிந்திப்பீர்கள். ஆகவே இந்தச் சிறப்பான புத்தகத்தை நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்து உங்கள் விமர்சனத்தை முன்வையுங்கள். மீ ஆவலுடன் வெயிட்டிங்.

புத்தகத்தின் விலை ஐம்பது ரூபாய் மட்டுமே.

புத்தகம் வேண்டுவோர், சென்னையில் 95978 00485 என்ற எண்ணிலும், புதுச்சேரியில் 95978 00487 என்ற எண்ணிலும், கோவையில் 95978 00415 என்ற எண்ணிலும், மதுரையில் 95978 00452 என்ற எண்ணிலும், சேலத்தில் 96009 69301 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசினால் புத்தகம் உங்கள் கைகளில் தவழும்.

உடனே பேசிடுவீங்கதான...?

Wednesday, August 2, 2017

“அண்ணே... அவசரமாப் பேசணும்னு சொன்னீங்களே... என்ன விஷயம்ணே?”

“வாய்யா... ப்ளாக் எழுதறதை விட்டுட்டு காணாமப் போய்ட்டவங்கன்னு சொல்லி நம்ம வெங்கட் நாகராஜ் ஒருபோஸ்ட் போட்ருக்காரு தெரியுமா.-? அதுல முக்கியக் குற்றவாளியா உன்னையும் சேத்திருக்காரு. அதான்... ஏன் நீ இங்கிட்டு வரலன்னு கேக்கலாம்னு கூப்ட்டேன்...”

“ப்ளாக் எழுதறதுக்கு நேரம் ஒதுக்க முடியாம முக்கிட்டு இருக்கறதால முக்கியக் குற்றவாளியா சேத்திருப்பாருண்ணே... ஹி... ஹி... ஹி...”

“ஏன் நேரம் ஒதுக்க முடியலை..? என்னாச்சு..?’‘

“வயித்துப் பொழப்புண்ணே. புல்டைம் ஜாபும், பார்ட் டைம் ஜாபுமா நேரத்தைச் சாப்பிட்ருது. வருமானம் வேணும்லண்ணே பொழைப்புக்கு..?”

“முன்ன ப்ளாக் எழுதிட்டிருந்தப்ப கோடீஸ்வரனா இருந்தியாக்கும்..? அப்பவும் துந்தனாதானே பொழப்பு..? அதில்லை சரியான காரணம். என்னான்னு தெரிஞ்சாவணும் எனக்கு இப்ப...”

“உங்களை டபாய்க்க முடியாது. கிடைக்கற கொஞ்ச நேரத்தை முகநூல்ல உலாவுறதுல செலவு பண்ணிட்டிருக்கேன் அண்ணே. அதான் இங்கிட்டு... ஹி.. ஹி.. ஹி...”

‘என்னது..? முகநூலா..? இங்க இல்லாத என்ன வசதி அங்க கெடைச்சிடுது உனக்கு அங்கயே சுத்திட்டிருக்கற அளவுக்கு..?”

“ரெண்டு சமாச்சாரம்ணே. இங்க எழுதி போஸ்ட் பண்ணிட்டு யாராச்சும் கமெண்ட் சொல்வாங்களான்னு பாத்துட்டிருப்போம். அதுக்கு நாம பதில் போட்டு, அத பாத்துட்டு அவங்க பதில் போட்டு... நாளே ஆயிடும்ணே. அங்கிட்டுன்னா பாத்த உடனே கமெண்ட் போடுவாங்க.நாம பதில் சொன்னா, உடனே பதில் சொல்லுவாங்க. போன்ல பேசிக்கறதுக்கு பதிலா டைப்பிங்ல பேசிக்கற மாதிரிண்ணே. அதான்.”

“ஓகோ... அந்த இன்னொரு சமாச்சாரம்..?”

“இங்ஙன எழுதறதுன்னா எதுனாச்சும் டாபிக் வேணும்ணே. கதையோ, கட்டுரையோ யோசிச்சு எழுதணும். அங்ஙன எழுதணும்னா பெருசா யோசிக்க வேண்டியதில்லைண்ணே. நாலு வரி எழுதுனாலே போதும். டைம் கம்மி. ஈஸியா எழுதிரலாம்ணே....”

“ஓகோ... அப்ப சோம்பேறியா ஆக்கிட்டிருக்குது போல அந்த முகநூல் உன்னைய...”

“அப்டியும் ஒரேயடியா சொல்லிட முடியாதுண்ணே. ப்ளாக்லயும், முகநூல்லயும் திரிஞ்சிட்டிருந்தா பத்தாது அச்சு ஊடகத்துலயும் நீ வரணும்னு நமக்கு வேண்டிய சில பேரு தூண்டி விட்டுட்டாங்கண்ணே. அந்த ஆசை தீயாப் புடிச்சுக்கிச்சு இப்ப. போன வாரத்துக்கு முந்தின வாரம் குமுதம் லைஃப் புக்குல என் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு வந்துச்சுண்ணே...’‘

“அடடே... சொல்லவே இல்லையே... எங்க அது..?’‘



“இதாண்ணே.. பாருங்க...”

“சபாஷ். அழகான லேஅவுட்ல பாக்கவே நல்லாருக்கு...”

“அவ்வ்வ்வ்... பாக்கத்தான் நல்லாருக்கா..? எழுதுனதும் நல்லாருக்குன்னு நெறையப் பேரு சொன்னாங்கண்ணே. இந்த இஷ்யூ ஜன்னல்ல பாக்கெட் நாவல் அசோகன் சாரை இண்டர்வியூ எடுக்க நானும் போயிருந்தேன் அண்ணே. சொன்னா நம்ப மாட்டீங்கன்னு சாட்சிக்கு போட்டோவே போட்ருக்காங்க பாருங்க இங்க...”



“சூப்பர். இப்டி ரெண்டு ப்ளஸண்ட் சமாச்சாரம் சொல்லிட்டு ஒரு கேக் கூடத் தராட்டி எப்டி..? வாய்யா, போலாம்...”

“கேக் இல்லண்ணே. கிராண்ட் பார்ட்டியே தந்துரலாம். ஏன்னா, இந்த ஆகஸ்ட் மாசத்துல என்னோட மொத மாச நாவல் வெளியாகப் போகுது. ஹி... ஹி... ஹி..”

“வாவ்.... யாரு வெளியிடறாங்க..? எப்ப வருது..?”

“பைனலைஸ் ஆயிருச்சே தவிர, வந்தப்பறம் சொல்லலாம்னு வாயைக் கட்டிருக்காங்கண்ணே. அதுனால வந்ததும் ஒடனே இங்கிட்டு வந்து சொல்லிர்றேன்...”

“சந்தோஷம்டே. ஆக மொத்தத்துல, அங்கிட்டும் இங்கிட்டும் உலாத்துவியே தவிர, ப்ளாக் ஏரியாவுக்கு எண்ட்ரி குடுக்க மாட்டேன்னு சொல்ல வர்ற..? அப்டித்தான..?”

“இல்லீங்ணா. பழைய மாதிரி ப்ளோவுல எழுத முடியுமான்னு கொஞ்சம் பயமா இருக்குங்ணா. நான் நல்லா எழுதி நாலு பேரு பாராட்டினா, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு அவரு சந்தோஷப்படுவாரு. சரியா எழுதலன்னா, “இதற்காடா ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு சொவத்துல முட்டிக்குவாரே.. அத நெனச்சாத்தான்ணே பாவமா இருக்குது...”

“அப்டிச் சொல்லாதீங்க பாலகணேஷ்.. அப்டில்லாம் நடக்காது. அதெல்லாம் எழுதிடுவீங்க. நீங்க யானை மாதிரி...”

“அவ்வ்வ்வ்வ்... அண்ணே, 108 கிலோ இருந்த வெயிட்டை இப்பத்தான் கொறைச்சு 96க்கு வந்துருக்கேன். இன்னும் தீவிரமா இலியானா மாதிரி ஒல்லியானா என்னன்னு யோசிச்சிங். இப்பப் போயி என்னைய யானைன்னு கேலி பண்றீங்களே...”

“அட, உடம்பு சைஸச் சொல்லலய்யா. எழுதற விஷயத்துல சொன்னேன். தயக்கத்தைத் தூர வெச்சுட்டு தைரியமா உள்ள பூந்து அடிச்சு ஆடுங்க. மறுத்துப்  பேசப்படாது. சொல்லிட்டேன்..”

“சரிங்கண்ணே. முன்ன மாதிரி ஒருநாள் விட்டு ஒரு நாள் எழுதாட்டியும் இனிமே வாரம் ஒண்ணாச்சும் போஸ்ட் எழுதிடறேண்ணே. வாங்க, ட்ரீட்டுக்குப் போகலாம்...”

Friday, May 12, 2017

ஒரு ‘நாய’கன் கதை..!

Posted by பால கணேஷ் Friday, May 12, 2017
நாய் படாத பாடு படுகிறேன்’ என்ற வார்த்தையை என்னிடம் யாராவது சொன்னீர்களோ... நாயில்லை, நான் கடித்துக் குதறி விடுவேன். என் வீட்டில் நாயானது மனுஷப்பாடு பட்டு சொகுசாக இருக்க, நான்தான் அதனால் ‘நாய் படாத பாடு’ பட்டுக் கொண்டிருக்கிறேன். இருங்கள்... இருங்கள்... நாய் என்றா சொன்னேன்..? இந்த வார்த்தை என் சகதர்மிணியின் காதில் விழுந்தால் அது இருக்கும், நான் இருக்க மாட்டேன். ஹி... ஹி.. ஹி... நியாயமாக நான் ராஜேந்திரன் என்று சொல்லியிருக்க வேண்டும். அவள் சூட்டிய நாமகரணம் அது. “ஏம்மா, நாய்களுக்கென்றே ஜிம்மி, டாமி, சுப்ரமணி என்றெல்லாம் பெயர்கள் இருக்கே. அதில ஒண்ணை வைக்கலாம்ல?” என்று கேட்ட என்னை (வழக்கம்போல்) புறந்தள்ளி அவளுக்குப் பிடித்த பெயரான ராஜேந்திரனை வைத்தாள்.

இந்த ராஜேந்திரன் என் வீட்டுக்கு வந்த விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். ஓர் (அ)சுபயோக (அ)சுபதினத்தில் என்னருகில் வந்து, “என்னங்க, ஆபீஸ்ல ஆடிட்டிங், இன்னும் ஒரு வாரம் ராப்பகலா வேலையிருக்கும்னு சொன்னீங்களே.... அதுவரைக்கும் எங்கம்மா வீட்டுல போய் இருந்துட்டு வரேன்” என்றாள்.

‘‘ஒரு வாரம் நிம்மதி’’ என்று நான் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்து தொலைத்தது. ‘‘என்னா...து? என்ன சொன்னீங்க?’’ என்று தோள்கள் ஏறி இறங்க புஸ் புஸ்ஸென்று கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.

‘‘ஐயையோ, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட. ஒரு வாரம் வீட்டு வேலை எதுவும் செய்யாம, நிம்மதியா அம்மா வீட்ல நீ என்ஜாய் பண்ணுவங்கறதைத்தான் சுருக்கமா நான் சொன்னேன்... ஹி... ஹி...’’ என்றேன்.

அடுத்த ஒரு வாரம் சந்தடியில்லாமல் சந்தோஷமாகப் போனது. ஆனாலும் விதி யாரை விட்டது..? அவள் மீண்டும் வந்தபோது அவள் கையில் பிடித்து வந்த அதைக் கண்டு அதிர்ந்து, “என்னம்மா இது?” என்றேன் கண்கள் விரிய. “அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு சுமதி ஆண்ட்டி வீட்ல இருந்துச்சு. கேட்டேன். குடுத்துட்டாங்க. ஒரு வயசுக் கொழந்தை. குட்டிங்க இது..” என்றாள்.

“அதுசரி.... ஒரு கன்னுக்குட்டியக் கூட்டிட்டு வந்து நாய்க்குட்டிங்கற. வேண்டாம்மா. எனக்கு நாய்ன்னா அலர்ஜின்னு உனக்குத் தெரியாதா..? இதை திருப்பிக் குடுத்துடு” என்றேன். “ஹும்... நான் ஆசைப்பட்டு ஒண்ணு வாங்கிட்டு வந்தா உங்களுக்குப் பொறுக்காதே...இதே உங்கம்மாவோ, தங்கச்சியோ கொண்டு வந்ததா இருக்கட்டும்..” என்று துவங்கி கமா இல்லாமல் அவள் பேசிய பராசக்தி நீள வசனத்தை இங்கே நான் சொன்னால் நீங்கள் ஓடி விடுவீர்கள். கடைசியில்.... வேறென்ன... வழக்கம் போல, நான் வாயை மூடிக் கொண்டு வெள்ளைக்கொடியைப் பிடிக்க வேண்டியதாயிற்று. ஹி.. ஹி... ஹி..

சரி, அதுபாட்டுக்கு ஒரு மூலையில் இருக்கட்டும் என்று நினைத்ததும் தவறாகப் போயிற்று. அடுத்த நாளே ராஜேந்திரனுக்காக ஷாப்பிங் போய்விட்டு அவள் வாங்கி வந்திருந்தவைகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். நாய்க்குக் கூட இவ்வளவு வெரைட்டியாக சோப், ஷாம்பு, பிஸ்கட் எல்லாம் இருக்கிறதா என்ன? ‘‘என்னதிது... உனக்குக் கூட அழகுபடுத்திக்க இவ்வளவு ஐட்டம்லாம் வாங்கின மாதிரி தெரியலையே...’’ என்றேன். ‘‘சும்மா இருங்க... எப்பப் பாரு கண்ணு போட்டுக்கிட்டு’’ என்றாள். அதற்கு குளியல், அலங்காரம், கழுத்துப் பட்டை என அமர்க்களப்பட்டது. அது சுகமாக உண்டு கொழுத்திருக்க, செலவுகளால் பட்ஜெட் எகிறி என் முழிதான் பிதுங்கிக் கொண்டிருந்தது.

‘‘என்னங்க... நைட்ல ராஜேந்திரன் சரியாவே தூங்க மாட்டேங்குது’’ என்றாள் ஒரு முறை. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது பாட்டுக்கு ஒரு மூலைல இருக்கறது பிடிக்கலையாக்கும்? அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க?’’ என்று கோபத்தில் ‌தான் ‘ஸேம் ஸைடு கோல்’ போடுவதை அறியாமல் அவள் பேச, நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அதன்பின் தானே தாமதமாக விஷயத்தைப் புரிந்து கொண்டு அமைதியாகத் தலையில் தட்டிக்கொண்டு அப்பால் சென்றாள்.

சில நாட்களில் அதைச் சகித்துக் கொண்டு வாழ நான் பழகி விட்டேன் (வேறு வழி?). அதனிடம் ஒரு வினோதப் பழக்கம் இருந்தது. ஒருமுறை என் நண்பன் கௌதம் வீட்டுக்கு வரும்போது பேசாமல் இருந்த அது, அடுத்த மாதத்தில் அவன் ஷேவ் செய்யாத பெருந்தாடியுடன் வந்தபோது மேலே விழுந்து பிடுங்கியதிலிருந்து உறுதியானது அதன் வினோதப் பழக்கம். யார் வந்தாலும் குலைக்கிற அது, தெரிந்தவர்கள், நண்பர்கள் வந்தால் சரிதா அல்லது நான் குரல் கொடுத்தால் அடங்கி விடும். ஆனால் தாடி வைத்த ஆசாமிகள் என்றால் எத்தனை சொன்னாலும் அடங்காது, மேலே விழுந்து பிறாண்டி விடும். போன ஜென்மத்தில் எதுவும் தாடி வைத்த வில்லனால் படாதபாடு பட்டிருக்கிறதோ என்னவோ...?

“என்னங்க... வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதைன்னு போர்டு வெச்சிரலாமா?” என்றாள் என்னவள். “நம்ம தெருவுல எந்த வீட்லயும் நாய் வளக்கலை. ‘தாய் இல்லம்’னு அழகா நான் பேர் வெச்ச வீட்டை எல்லாரும் இப்ப அடையாளம் காட்டறதே ‘நாய் இல்லம்’ன்னு தான். போர்டு வேற தேவைதானா உன் ராஜேந்திரனுக்கு?” என்றேன். நிஷ்டூரமாக என்னை முறைத்துவிட்டு அகன்றாள்.

அதன் வினோதப் பழக்கம் பற்றிச் சொன்னேனில்லையா..?அதனாலயே அவள் ஒருமுறை பாதிக்கப்பட்டு கடைசியாக அதை வாங்கி வந்த இடத்திலேயே சேர்த்து விட்டாள். அது எப்டி நடந்துச்சுன்னாக்க....

அவளுடைய நாய்மாமன், ச்சே, தாய்மாமன் சுந்தரராமன் வீட்டுக்கு வருவதாகப் போன் செய்திருந்தார் அன்று. இவளும் மாமாவுக்காக விசேஷமாய்ச் சமைத்துக் காத்திருக்க, டெய்லி ஷேவ் செய்கிற அவள் மாமா விதிப்பயனாக இம்முறை வந்தார் பெருந்தாடியுடன். வள்ளென்று குலைத்த ராஜேந்திரனை அடக்குவதற்குள், அது கழுத்துப் பட்டியை அறுத்துக் கொண்டு பாய்ந்து அவரைக் கவ்வி விட்டது. சுமார் கால்கிலோ கறியாவது போயிருக்கும் அதன் வாய்க்குள். “ஐயோ, அம்மா” என்று அலறிக் கொண்டு அவர் வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ஓட, கிடைத்த கறி பற்றாதென்று நினைத்ததோ என்னவோ ராஜேந்திரனும் பின்னாலேயே துரத்தியது.

“என்னங்க மாமாவக் காப்பாத்துங்க...” என்ற மனைவியின் அலறலுக்கு மதிப்பளித்து நானும் பின்னாலேயே,“பிடிங்க... ராஜேந்திரனைப் புடிங்க...” என்று கத்திக் கொண்டு தெருவிலிறங்கி ஓடினேன். எனக்குச் சற்றுப் பின்னால் தன் ஸ்தூல சரீரத்தால் மூச்சுவாங்க, ஓட முடியாமல் ஓடிவந்தாள் அவளும்.

“புடிங்க... அந்த ராஜேந்திரனைப் புடிங்க.” என்று மறுபடி நான் கூவி கை காட்டியபடி ஓட, எதிரே வந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் சட்டென்று மடக்கிப் பிடித்தார்கள் -ராஜேந்திரனை அல்ல- மாமா சுந்தரராமனை. அவர் ஏதோ திருடிக் கொண்டுதான் ஓடிவருகிறார், நானும் நாயும் துரத்துகிறோம் என்று நினைத்த அவர்கள் அடுத்த கணம் அவருக்கு தர்ம அடியை வினியோகிக்கத் துவங்கினார்கள்.

“ஐயோ, அம்மா” என்று டிட்டோவாக மாமா மீண்டும் அலற, நான் சென்று தடுத்தாட் கொண்டேன். “ஏங்க, நாயைப் புடிக்கச் சொன்னா, இப்டியா என் மாமாவப் புடிச்சு அடிப்பீங்க..?” என்றாள் ஓடிவந்ததில் மூச்சு வாங்க.

அடுத்த கணம் வந்ததே கோபம் ஒரு இளைஞனுக்கு... “ஏம்மா, நாய்க்கு வெக்கறதுக்கு வேற பேரா கெடைக்கலை உனக்கு..? மணி, டாமின்னு வெக்கறத விட்டுட்டு ராஜேந்திரன்ங்கற நல்ல பேரைப் போயா வெப்பீங்க..?” என்று அவள் மீது காட்டமாகப் பாய்ந்தான். “எனக்குப் புடிச்ச பேர்னு வெச்சேன். உங்களுக்கென்னங்க வந்தது?” என்று சரிதா அவன் மேல் பாய, “என் பேர் ராஜேந்திரன்ங்க...” என்று அவன் கடுப்பாகிக் கத்த, நான் வாய் விட்டே சிரித்து விட்டேன். ‘இடுக்கண் வருங்கால் நக’ச் சொல்லியிருந்த இரண்டடியாரின் குறளை மீறாமல் கடுக்கண் அணிந்த அவள் மாமாவைக் கண்டு நான் நகைத்ததால் காண்டாகிப் போனாள் என்னவள்


“இனிமே உன் வீட்டுப் பக்கம் காலெடுத்து வெச்சேன்னா நான் சுந்தரராமன் இல்ல, சுரணை கெட்ட ராமன்” என்று துவங்கி மாமா லட்சார்ச்சனை செய்துவிட்டு (அவள் மாமாவாயிற்றே... சுருக்கமாகப் பேசுவாரா என்ன..?) எத்தனையோ சமாதானம் சொன்னாலும் கேட்காமல், திரும்பிப் பாராமல் சென்று விட்டார். எனக்கென்னவோ அந்தச் சம்பவத்துக்குப் பின் எனக்கு ராஜேந்திரனைப் பிடித்துப் போய் விட்டது (ஹி.. ஹி... ஹி...) என்றாலும் அதனாலேயே அவளுக்குப் பிடிக்காமல் போக அதை வாங்கிய இடத்திலேயே திருப்பித் தந்துவிட்டாள். ‘நாயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பழமொழியைச் சற்றே மாற்றி நிம்மதியாக இருந்து கொண்டிருக்கிறேன் அடியேன்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube